மனித உரிமை மீறல்களுக்கான விலையை சீனா நிச்சயம் கொடுக்கும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
உய்குர் மக்களுக்கு எதிராக ஏராளமான மனித உரிமை நடவடிக்கைகளில் சீனா ஈடுபடுவதாக உலக நாடுகள் குற்றம் சுமத்தி வந்தன. இந்த நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜோ பைடன் கூறும்போது, “சீனா அடக்குமுறைகளில் ஈடுபடுவதை நான் நன்கு அறிவேன். சீனா அதன் மனித உரிமை மீறல்களுக்கான விலையை நிச்சயம் கொடுக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்றபின் சீனா குறித்துப் பேசும்போது, “சீனா உலகத்தின் தலைவராக முயற்சி செய்கிறது” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பின்னணி என்ன?
சீனாவில் ஜின்ஜியாங் மாகாணத்தின் மேற்குப் பகுதியில் உய்குர் மொழி பேசும் உய்குர் முஸ்லிம்கள் உள்ளிட்ட பல்வேறு சிறுபான்மை மக்கள் வசிக்கின்றனர். சீனாவின் மற்ற மாநிலங்களில் குழந்தைப் பிறப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த மாகாணத்தில் மட்டும் கட்டுக்குள் வரவில்லை.
இதனால் கடந்த சில ஆண்டுகளாக முஸ்லிம்கள், சிறுபான்மைப் பிரிவினர் இடையே குழந்தைப் பேற்றைத் தடுக்க அத்துமீறும் பல்வேறு செயல்களில் சீன அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் என்று அசோசியேட் பிரஸ் (ஏ.பி.) செய்தி நிறுவனம் நடத்திய கள ஆய்வில் தெரியவந்தது. மேலும், அங்குள்ள மசூதிகளை சீனா இடிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதனைத் தொடர்ந்து உய்குர் முஸ்லிம்கள் தொடர்பாக உலக நாடுகளிடையே எதிர் மறையான விமர்சனத்தை சீனா பெற்றது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டைசீனா தொடர்ந்து மறுத்து வருகிறது.