சுமார் 8 லட்சத்துக்கும் அதிகமான அஸ்ட்ராஜென்கா கரோனா தடுப்பு மருந்துகளை மெக்சிகோவுக்கு இந்தியா அனுப்பியுள்ளது.
இதுகுறித்து மெக்சிகோ வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில், “ சுமார் 8,70,000 அஸ்ட்ராஜென்கா கரோனா தடுப்பு மருந்துகளை இந்தியாவிடமிருந்து வாங்கி உள்ளோம். இதனைத் தொடர்ந்து முதியவர்களுக்கு கரோனா தடுப்பு மருந்துகளை அடுத்தக் கட்டமாக செலுத்த முடிவு செய்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளது.
மெக்சிகோவில் கடந்த சில நாட்களாகவே கரோனா பலி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மெக்சிகோவில் இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.
பிரிட்டனில் பரவத் தொடங்கிய உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ், ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் பரவி வருகிறது.
இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் கரோனா மருத்துவப் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. சமூக விலகலை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு சார்பாகத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
ஸ்புட்னிக், மாடர்னா, பைசர் ஆகிய கரோனா தடுப்பு மருந்துகள் புதிய வகை கரோனா வைரஸுக்கு எதிராகப் பயன் அளிப்பதாக மருந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.