உலகம்

நீதிமன்றத்தில் மனைவிக்கு இதய சின்னத்தைக் காட்டிய அலெக்ஸி நவால்னி

செய்திப்பிரிவு

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி நீதிமன்றத்தில் மனைவிக்குத் தன் அன்பை வெளிப்படுத்தும் விதமாக இதய சின்னத்தைக் காட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டானது.

ரஷ்யா திரும்பிய அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து ரஷ்யா முழுவதும் அலெக்ஸி நவால்னியின் ஆதரவாளர்கள் பேரணி சென்றனர். இதில் 10,000க்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர். இதில் 1,000க்கும் அதிகமானவர்களை ரஷ்ய போலீஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அலெக்ஸி நவால்னிக்கு மோசடி வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் அலெக்ஸிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து அவருடைய ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நீதிமன்றத்தில் அலெக்ஸி நேற்று ஆஜர் செய்யப்பட்டார். அப்போது கண்ணாடி அறையில் நின்று இருந்த நவால்னி தனது மனைவியை நோக்கி இதய சின்னத்தைக் காட்டினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

நடந்தது என்ன?

ரஷ்ய அதிபர் புதினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையாக விமர்சித்து வந்தவர் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி. ரஷ்ய அதிபர் தேர்தலின்போதும் தொடர் பிரச்சாரங்களில் ஈடுபட்ட அலெக்ஸி நவால்னிக்கு இளைஞர்கள் மத்தியில் பரவலான வரவேற்பு இருந்தது.

ஆனால், புதின் அரசு அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி, அவரைத் தேர்தலில் போட்டியிட முடியாமல் செய்தது. இருப்பினும் அலெக்ஸி நவால்னி தொடர்ந்து பொதுவெளியில் புதின் அரசை விமர்சித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் டாம்ஸ்க் நகரிலிருந்து மாஸ்கோவுக்கு விமானத்தில் செல்லும்போது அலெக்ஸி மயங்கி விழுந்தார். இதனைத் தொடர்ந்து அவர் ஜெர்மனியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அலெக்ஸி நவால்னிக்கு விஷம் வைக்கப்பட்டதை ஜெர்மனி அரசு சமீபத்தில் உறுதிப்படுத்தியது. அவருக்கு விஷம் வைக்கப்பட்டது தொடர்பாக தங்களுக்கு ஆதாரம் கிடைத்துள்ளதாக ஜெர்மனி தெரிவித்தது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை ரஷ்யா முற்றிலுமாக மறுத்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அலெக்ஸியின் சிறை தண்டனைக்கு ஐரோப்பியாவைச் சேர்ந்த பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

SCROLL FOR NEXT