ரஷ்யாவின் கரோனா தடுப்பு மருந்துப் பயன்பாட்டுக்கு உக்ரைன் அரசு தடை விதித்துள்ளது.
இதுகுறித்து உக்ரைன் சுகாதாரத் துறை தரப்பில், “உக்ரைன் நாடாளுமன்றம் கரோனா தடுப்பு மருந்து செலுத்துவதை அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வரும் கரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சில அரசியல் கட்சிகள் இது தொடர்பாக வதந்திகளைப் பரப்புகின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இதற்கான காரணம் குறித்து தகவல் வெளியாகவில்லை.
உக்ரைனில் கடந்த சில நாட்களாக கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து அங்கு கரோனா கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
உக்ரைனில் இதுவரை 12 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.
கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கையை அனுமதித்து வருகின்றன.
இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தெற்கு இங்கிலாந்தில் உள்ள கென்ட் மாகாணத்தில் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ், ஏற்கெனவே இருந்த கரோனா வைரஸ் பரவும் வேகத்தைவிட 70 சதவீதம் வேகமாகப் பரவும் தன்மை கொண்டது என அறியப்பட்டது.
இதையடுத்து, பிரிட்டன் உள்ளிட்ட சில ஐரோப்பிய நாடுகளில் நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. மேலும், பிரிட்டனுக்கு 40க்கும் மேற்பட்ட நாடுகள் விமானப் போக்குவரத்துக்குத் தடை விதித்துள்ளன.
கரோனா பரவல் ஒருபுறம் இருக்க, பல நாடுகளில் கரோனா தடுப்பு மருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.