அமெரிக்க வங்கிகளை மோசடி செய்து, அல்-கய்தா பயங்கரவாதத்துக்கு ஆதரவளித்து வந்ததாக 4 பேர் மீது அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. இதில் 2 பேர் இந்தியர்கள் என்பதும் இவர்கள் சகோதரர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
ஏமன் நாட்டில் உள்ள அல்-கய்தா பயங்கரவாதி அன்வர் அல்-அவ்லாகிக்கு பண உதவி உட்பட பிற உதவிகள் செய்யப்பட்டதாக பரூக் மொகமது மற்றும் இப்ரஹிம் மொகமது ஆகியோ மீது எப்.பி.ஐ. குற்றம் சாட்டியுள்ளது. பரூக், ஏமன் சென்று அங்கு அல்-கய்தா தலைவரைச் சந்தித்ததாக எப்.பி.ஐ. விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.
இந்தச் சகோதரர்கள் அமெரிக்காவுக்கு பொறியியல் பட்டப்படிப்புக்காக வந்துள்ளனர். இந்தச் சகோதரர்கள் பற்றிய கூடுதல் தகவல்கள் இப்போதைக்கு தெரியவில்லை. 37 வயதான பரூக் ஓஹியோ ஸ்டேட் யுனிவர்சிட்டியின் பொறியியல் மாணவர். மார்ச் 2008-ல் இவர் அமெரிக்க பெண்ணை மணந்தார். இவரது சகோதரர் இப்ரஹிம் (36), 2001-2005-ம் ஆண்டுகளில் இலினாய் பல்கலைக் கழகத்தில் பொறியியல் படித்தார். இவரும் பிறகு ஓஹியோவுக்குச் சென்று அங்கு அமெரிக்க பெண்ணை மணந்து கொண்டார்.
நால்வரில் மற்ற இருவர், அசீப் அகமது சலீம் (35), மற்றும் சுல்தானே ரூம் சலீம் (40) ஆகியோர் அமெரிக்க குடிமகன்கள் ஆவர்.
இது குறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு துறையின் உதவி அட்டார்னி ஜெனரல் ஜான் கார்லின் கூறும்போது, “பரூக் மொகமது, இப்ரஹிம் மொகமது, அசிப் சலீம், சுல்தானே சலீம் ஆகிய 4 பேரும் ஏமன் அல்கய்தா தலைவர் அன்வர் அல்வாகிக்கு பொருளுதவி செய்தனர் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது” என்றார்.
அதாவது ஆயிரக்கணக்கான டாலர்களை அனுப்ப திட்டமிட்டதாக தெரியவந்துள்ளது. அதாவது பயங்கரவாத ஜிஹாதுக்கு ஆதரவளிக்க ஏமன் அல்கய்தா தலைவர் அழைப்பு விடுத்ததும் இவர்கள் அந்த அழைப்பை ஏற்றதும் தெரிய வந்துள்ளது.
ஜூலை 22, 2009-ல் பரூக் மொகமது மற்ற 2 பேருடன் ஏமன் நாட்டுக்குச் சென்று அன்வர் அல்-அவ்லாக்கி என்ற அல்கய்தா பயங்கரவாதத் தலைவரை சந்திக்கச் சென்றுள்ளனர், ஆனால் அவரைச் சந்திக்க முடியவில்லை, இதனையடுத்து அவரது கூட்டாளியைச் சந்தித்து 22,000 டாலர்கள் தொகையை கொடுத்து இதனை அவ்லாகியிடம் அளித்து விடுமாறு கோரியதும் தெரியவந்துள்ளது.