முன்னாள் அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் படுகொலை செய்யப்படுவதற்கு சில வாரங்கள் முன்பு தன் கைப்பட 10 வயது சிறுவனுக்கு எழுதிய கடிதம் 22.13 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு (சுமார் ரூ.14.5 கோடி) ஏலத்தில் எடுக்கப்பட்டது.
1865-ம் ஆண்டு, லிங்கன் தனது உள்துறை அமைச்சர் ஜான் யூசரின் மகன் லின்டன் யூசருக்கு இக்கடிதத்தை கைப்பட எழுதி, கையொப்பமிட்டுள்ளார். தனது இரண்டாவது தொடக்க உரையின் கடைசி பகுதியை அதில் லிங்கன் எழுதியுள்ளார்.
ஹெரிடேஜ் ஏல மையத்தில் நேற்று முன்தினம் விடப்பட்ட ஏலத்தில் இக்கடிதம் சுமார் ரூ.14.5 கோடிக்கு எடுக்கப்பட்டது. ஏலத்தில் எடுத்தவர் தனது பெயரை வெளியிட விரும்ப வில்லை.
இதுபோன்று 5 கடிதங்களே இருப்பதால் இது மிகவும் அரிதானதாகக் கருதப்படுகிறது. 16-வது அமெரிக்க அதிபரான லிங்கன், இரண்டாவது முறையாக அதிபராக பதவியேற்ற போது பேசிய உரையின் கடைசி பகுதியிலிருந்து சுமார் 13 வரிகளை எழுதி அதில் கையொப்பமிட்டுள்ளார்.
அமெரிக்க உள்நாட்டுப் போரின்போதும் இக்கடிதத்தை யூசர் குடும்பத்தினர் பத்திரமாக பாதுகாத்து வைத்துள்ளனர்.