ஈரானில் வரும் வாரங்களில் கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்படும் என்று அந்நாட்டு அதிபர் ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஹசன் ரவ்ஹானி கூறும்போது, “உள்ளூர் தடுப்பூசிகள் கிடைக்கும் வரை வெளிநாட்டுத் தடுப்பூசிகள் அவசியம். வரும் வாரங்களில் கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்படும்” என்றார்.
எந்த நாட்டின் தடுப்பு மருந்தை ஈரான் பயன்படுத்தப் போகிறது என்று தெரிவிக்கப்படவில்லை.
ஈரானில் தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பு மருந்தை மனிதர்களுக்குச் செலுத்தும் பரிசோதனையை அந்நாட்டு அரசு கடந்த வாரம் தொடங்கியது.
ஈரானில் சமீப நாட்களாகவே கரோனா தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அங்கு பழைய கட்டுப்பாடுகள் மீண்டும் தொடங்கப்பட்டன. பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜிம், உணவகங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்தியக் கிழக்கு நாடுகளில் ஈரானும், சவுதியும் கரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. 80 மில்லியன் மக்கள்தொகை கொண்ட ஈரான், கரோனா வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மத்தியக் கிழக்கு நாடாக உள்ளது.
முன்னதாக, அமெரிக்கா மற்றும் பிரிட்டனிடமிருந்து கரோனா தடுப்பு மருந்துகளை ஈரான் வாங்காது. அவர்களது தடுப்பு மருந்துகளை நம்ப முடியாது. பிரான்ஸின் தடுப்பு மருந்துகளும் நம்பிக்கைக்குரியது அல்ல. நாங்கள் எங்களுக்குக் கரோனா தடுப்பு குறித்து நம்பகத்தன்மை எங்கு உள்ளதோ அங்கு வாங்குவோம் என்று ஈரான் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.