உலகம்

நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவச கரோனா தடுப்பூசி: சீனா அறிவிப்பு

செய்திப்பிரிவு

நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவச கரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று சீனா அறிவித்துள்ளது.

இது தொடர்பாக இன்று (சனிக்கிழமை) பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய சுகாதார ஆணைய அதிகாரி ஸெங் ஸோங்வெய், ''கோவிட் தடுப்பூசி உருவாக்கம் மற்றும் அவற்றைக் கொண்டு வருவதற்குச் செலவு பிடிக்கும் என்றாலும் குடிமக்களுக்குத் தடுப்பூசியை அரசு இலவசமாக அளிக்கும். இதற்காக நமது மக்கள் ஒரு சென்ட் (சீன நாணயம்) கூடச் செலவு செய்ய வேண்டியதில்லை'' என்று தெரிவித்தார்.

சீனா கடந்த டிசம்பர் மாதம் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக முதல் தடுப்பூசிக்கு அனுமதி அளித்தது. முன்னதாக மருத்துவப் பணியாளர்கள் உட்பட சிறிய குழுவுக்கு 3 தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. அவசர காலப் பயன்பாட்டுக்காக அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அவற்றில் தொற்று ஏற்படும் அபாயம் அதிக அளவில் இருந்தது.

சீனாவின் ஹூபே மாகாணத்தில் கரோனா பரவல் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து அங்கு ஊரடங்கு விதிக்கப்பட்டது. ஹூபே மட்டுமல்லாமல் சீனாவின் வடக்குப் பகுதிகளிலும் கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.

வூஹான் நகரில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, அரசு வெளியிட்ட எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகம் என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT