கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் நலமாக இருக்கிறார் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரான்ஸ் அரசுத் தரப்பில், “அதிபர் மக்ரோனுக்குக் கரோனா அறிகுறிகளான இருமல், உடல் வலி ஆகியவை உள்ளன. எனினும் மக்ரோனின் உடல் நிலை நலமாக உள்ளது. தொடர்ந்து ஏழு நாட்களுக்கு அவர் தனிமைப்படுத்தப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸில் கடந்த சில நாட்களாக 30 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கு காலகட்டத்தில் 4,000 என்ற அளவில் பிரான்ஸில் கரோனா தொற்று ஏற்பட்டது. சமீப நாட்களாக கரோனா தொற்று அதிகம் பரவி வருகிறது. இதனைத் தொடர்ந்து பிரான்ஸ் அதிபர் மக்ரோன் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் பிரான்ஸில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அடுத்த வருடம் ஜனவரி மாதம் உணவு விடுதிகள் திறக்கப்படும் என்று பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.
உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 6 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.