ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 7 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ஈரானில் சுகாதாரத் துறை அமைச்கம் கூறும்போது, “நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 7,603 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை 11,31,007 ஆக அதிகரித்துள்ளது. கரோனா பலி எண்ணிக்கை 52 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் சமீப நாட்களாகவே கரோனா தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அங்கு பழைய கட்டுப்பாடுகள் மீண்டும் தொடங்கியுள்ளன. பொதுமக்கள் அதிக எண்ணிகையில் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜிம், உணவகங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்தியக் கிழக்கு நாடுகளில் ஈரானும், சவுதியும் கரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. 80 மில்லியன் மக்கள்தொகை கொண்ட ஈரான், கரோனா வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மத்தியக் கிழக்கு நாடாக உள்ளது.
ஈரானின் புனித நகரமான கூமிலில் பிப்ரவரி மாதத்தில், முதல் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து வடபகுதியில் உள்ள சுற்றுலா நகரமான கிலான் கடுமையான பாதிப்புக்குள்ளானது. தற்போது ஈரானின் எல்லைப் பகுதியில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் கரோனா தடுப்பு மருந்தைப் பெறும் தங்கள் நாட்டின் முயற்சிகளுக்கு அமெரிக்கா தடை விதிக்கிறது என்று ஈரான் குற்றம் சுமத்தியுள்ளது.