உலகம்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதல்: 13 போலீஸார் பலி

செய்திப்பிரிவு

ஆப்கானிஸ்தானின் பக்லான் மாகாணத்தில் நடத்தப்பட்ட தலிபான்கள் தாக்குதலில் 13 போலீஸார் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

இதுகுறித்து ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தரப்பில், “ஆப்கானிஸ்தானின் பக்லான் மாகாணத்தில் உள்ள சோதனைச் சாவடியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் போலீஸார் 13 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலில் பல வாகனங்கள் சேதமடைந்தன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்நிலையில், இத்தாக்குதலை தலிபான்கள் நடத்தியுள்ளதாக அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடனான போரை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், தலிபான்களை அவ்வப்போது ஆப்கன் அரசு விடுவித்து வருகிறது. மேலும், ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தலிபான்கள் இடையே கத்தாரில் நடைபெறும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அதிபர் அஷ்ரப் கானி சம்மதம் தெரிவித்திருந்தார்.

முன்னதாக, ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடனான போரை முடிவுக்குக் கொண்டு வர தலிபான்களின் நிபந்தனைகளை ஏற்று 900 தலிபான்கள் விடுதலை செய்யப்பட்டனர். இதற்கிடையிலும் ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும், அரசுப் படைகளுக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது. இந்த நிலையில் ஐஎஸ் தீவிரவாதிகளும் தாக்குதலை அவ்வப்போது நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT