அமெரிக்காவுக்குள் நுழைய மோடிக்கு தடை இருந்திருந்தாலும், இப்போது அந்நாட்டில் புதிய பேஷன் அவதாரமாக பார்க்கப்படுகிறார் மோடி.
ஆம், நரேந்திர மோடி இந்தியப் பிரதமராக பதவியேற்ற பின்னர் அவரது உடை அலங்காரம் அமெரிக்காவின் டைம், நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் ஆகிய முன்னணி ஊடகங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அங்கு, 'மோடி குர்தா' மிகவும் பிரபலமாகியுள்ளது.
‘A Leader Who Is What He Wears’ என்ற தலைப்பில் 'தி நியூயார்க் டைம்ஸ்' வெளியிட்டுள்ள கட்டுரையில், 'உலக அளவில் மிச்செல் ஒபாமா, பிரான்கோயிஸ் ஹோலண்டே, டில்மா ரூசோப், மண்டேலா உள்ளிட்ட பலரது உடை அலங்காரம் குறித்து தனிப்பட்ட வலைப்பூக்களே உருவாக்கப்பட்டிருந்தாலும், நரேந்திர மோடியின் உடை அலங்காரம் ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளும் அளவிற்கு சிறப்பாக இருக்கிறது.
சர்வதேச தலைவர்களை ஒப்பிடும்போது இந்திய தலைவர்கள் தங்கள் உடை அலங்காரத்தையே தங்கள் எண்ணங்களை உணர்த்தும் உபகரணமாக பயன்படுத்துவார்கள். ஆனால் மோடி அவர்களையும் விஞ்சிவிட்டார். அவரது உடை நிறையவே உணர்த்துகிறது.' என குறிப்பிட்டுள்ளது.
மோடியின் பேஷன் குறித்து 'தி வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகை, 'மிச்செல் ஒபாமாவே தள்ளியிருங்கள் இந்த உலகிற்கு புதிய பேஷன் நாயகர் கிடைத்துவிட்டார்' என புகழாரம் சூட்டியுள்ளது.
நேற்று, 'டைம்' பத்திரிகையில் வெளியான ஒரு கட்டுரையில், 'இந்திய பேஷன் உலகில் நரேந்திர மோடிக்குத்தான் அடுத்த பெரிய இடம்' என குறிப்பிட்டிருந்தது.