மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் ஹரியாணா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக வெளிநாடுகளிலும் பல அமைப்புகள் போராடி வருகின்றன.
அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் இந்திய தூதரகம் முன்பு சீக்கிய இளைஞர் அமைப்பு சார்பில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடந்தது. மத்திய அரசுக்கு எதிராகவும் பிரதமர் மோடிக்கு எதிராகவும் கோஷமிட்டனர். அப்போது திடீரென காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் அங்கு இருந்த மகாத்மா காந்தியின் சிலை மீது ஏறி கோஷமிட்டனர். சிலர் காந்தியின் சிலை மீது காலிஸ்தான் இயக்கத்தின் கொடியை போர்த்தி அவமரியாதை செய்தனர். இந்தியாவுக்கு எதிராகவும் கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டக்காரர்களின் இந்த செயல் விஷமத்தனமானது என இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்தது. உலகின் அமைதி மற்றும் நீதியின் சின்னமாக திகழ்பவரை போராட்டக்காரர்கள் அவமதித்துள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. காந்தி சிலையை அவமரியாதை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இது தொடர்பாக அமெரிக்க அரசிடம் வலியுறுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.