பிரிட்டனில் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் இன்று அதிகாரபூர்வமாகத் தொடங்கப்பட்டது. இதில் வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்த 90 வயதான மூதாட்டி முதல் நபராக பைஸர்-பயோஎன்டெக் கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார்.
கரோனா வைரஸுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் தடுப்பூசி முகாமை பிரிட்டன் அரசு இன்று தொடங்கியுள்ளது. பைஸர்-பயோஎன்டெக் நிறுவனம் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட கரோனா தடுப்பு மருந்து 95 சதவீதம் கரோனா வைரஸுக்கு எதிராக சிறப்பாகச் செயல்படுவதாக ஆய்வில் தெரியவந்தது.
இதையடுத்து, பிரிட்டனின் சுகாதாரத்துறை, மருந்து மற்றும் சுகாதாரத்துறை பொருட்கள் ஒழுங்குமுறை அமைப்பு ஆகியவை பைஸர் நிறுவனத்தின் தடுப்பூசியை மக்களுக்குச் செலுத்த அரசுக்கு அனுமதி வழங்கியது. இதையடுத்து, இன்று (செவ்வாய்கிழமை) பிரிட்டனில் மிகப்பெரிய அளவில் கரோனா தடுப்பூசி முகாம் தொடங்கப்படும் என்று அரசு அறிவித்தது.
முதல்கட்டமாக பிரிட்டனில் 80 வயதுக்கு அதிகமான முதியோர், முன்களப்பணியாளர்கள், வீடுகளில் பணியாற்றும் பணியாளர்கள், மருத்துவ, சுகாதாரப்பணியாளர்கள் ஆகியோருக்கு கரோனா தடுப்பூசி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதற்காக பிரிட்டனில் உள்ள 50-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை அரசு செய்தது.
இதன்படி பிரிட்டனில் முதல் நபராக வடக்கு அயர்லாந்தில் உள்ள என்னிஸ்கிளன் எனும் நகரைச் சேர்ந்த 90 வயது மூதாட்டி மார்கரெட் கீனனுக்கு பைஸர் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. கோவன்ட்ரி நகரில் உள்ள பல்கலைக்கழக மருத்துவமனைக்கு இன்று காலை 6.31 மணிக்கு வந்த கீனனுக்கு செவிலியர் மே பார்ஸன் தடுப்பூசி செலுத்தினார்.
பைஸர்-பயோஎன்டெக் கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்ட பிரி்ட்டனைச் சேர்ந்த முதல் நபர் 90வயதான மூதாட்டி கீனன் என்பது குறிப்பிடத்தக்கது.
தடுப்பூசி போட்டுக்கொண்டது குறித்து மூதாட்டி கீனன் கூறுகையில் “ எனக்கு கிடைத்த சிறப்புரிமையை, மரியாதையாக கருதுகிறேன்.என்னுடைய பிறந்தநாளுக்கு முன்கூட்டியே பரிசுகிடைத்துள்ளது. ஓர் ஆண்டுக்குப்பின், வரும் புத்தாண்டுக்கு என்னுடைய நண்பர்கள், குடும்பத்தாருடன் அதிகமான நேரத்தைச் செலவிட முடியும்.
எனக்கு தடுப்பூசி செலுத்திய செவிலியர், மருத்துவமனைக்கு நன்றி. 90 வயதான நானே தடுப்பூசி எடுத்துக்கொண்டதால் ஒவ்வொருவரும் செலுத்திக்கொள்ளுங்கள் என்பதே எனது அறிவுரை” எனத் தெரிவித்தார்.