உலகம்

பிரிட்டன் மக்களுக்கு அடுத்த வாரம் கரோனா தடுப்பூசி: வயது வாரியாக 9 பிரிவினருக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்க ஏற்பாடு

செய்திப்பிரிவு

சர்வதேச கரோனா வைரஸ் பாதிப்பில், பிரிட்டன் 7-வது இடத்தில் உள்ளது. இதுவரை 16 லட்சத்து 73 ஆயிரம் பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் வைரஸ் பரவல் உச்சத்தை எட்டிகுறைந்த நிலையில், அங்கு மீண்டும் வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.

பிரிட்டனின் மக்கள் தொகை 6.66 கோடியாகும். அந்த நாட்டில்தற்போது நாள்தோறும் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு வருகிறது. வைரஸ் பரவல்அதிகரித்ததால் கடந்த நவம்பர்தொடக்கத்தில் 2-ம் கட்ட ஊரடங்கு அமல் செய்யப்பட்டது. இதன் காரணமாக 30 சதவீதம் அளவுக்கு வைரஸ் பரவல் குறைந்தது. இந்த ஊரடங்கு நேற்றுடன் நிறைவடைந்தது. எனினும்பிரிட்டன் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கின்றன.

இந்த பின்னணியில் அமெரிக்காவை சேர்ந்த பைசர், ஜெர்மனியை சேர்ந்த பயோ என்டெக் மருந்து நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள கரோனா தடுப்பூசியை அவசரகால அடிப்படையில் பயன்படுத்தபிரிட்டன் அரசு நேற்று அனுமதி வழங்கியது. இதுகுறித்து சுகாதாரத் துறை செயலாளர் மெட் ஹென்காக், லண்டனில் நேற்று கூறியதாவது:

உலகின் முதல் நாடாக பைசர்நிறுவன கரோனா தடுப்பூசியை பயன்படுத்த பிரிட்டன் அரசு அனுமதி வழங்கியுள்ளது. பைசர் நிறுவனம் தனது பரிசோதனை குறித்த ஆய்வறிக்கையை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் அளித்துள்ளது. அவை இன்னும் பரிசீலனை நிலையிலேயே உள்ளன.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறி விட்டதால் நாங்கள் துரிதமாக செயல்பட்டு பைசர் தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி வழங்கி உள்ளோம். இந்த தடுப்பூசி 95 சதவீதம் பலன் அளிக்கிறது.

பைசர் நிறுவனத்திடம் இருந்து 4 கோடி தடுப்பூசிகளை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளோம். முதல் கட்டமாக 8 லட்சம் தடுப்பூசிகள் அடுத்த வாரம் பிரிட்டனுக்கு வருகிறது. இது இரு முறை போட வேண்டிய தடுப்பூசி. இதன்படி முன்னுரிமை அடிப்படையில் 4 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படும். இவ்வாறு மெட் ஹென்காக் தெரிவித்தார்.

தடுப்பூசி முன்னுரிமைக்காக 9 வகையான பட்டியலை பிரிட்டன் சுகாதாரத் துறை தயாரித்துள்ளது. இதன்படி முதியோர் இல்லத்தில் தங்கியிருப்போர், அங்கு பணியாற்றுவோருக்கு முதலில் தடுப்பூசி போடப்படும். 2-ம் கட்டமாக 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து75 வயது, 70 வயது, 65 வயது, 60 வயது என்று வயது வாரியாக 9 வகையான பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

ஜப்பானில் இலவசம்

சர்வதேச கரோனா பாதிப்பில் ஜப்பான் 45-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் ஜப்பானிய மக்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடவகை செய்யும் சட்டம் அந்தநாட்டு நாடாளுமன்றத்தில் நேற்றுநிறைவேற்றப்பட்டது.அமெரிக்காவின் பைசர் நிறுவனத்திடம் இருந்து கரோனா தடுப்பூசிகளை ஜப்பான் அரசு வாங்குகிறது. இதன்மூலம் 6 கோடிபேருக்கு தடுப்பூசி போடப்படஉள்ளது. இதேபோல அமெரிக்காவின் மாடர்னா நிறுவனத்திடம் வாங்கும் கரோனா தடுப்பூசி 2.5 கோடி பேருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.

தவிர பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனத்திடம் இருந்து 12 கோடி கரோனா தடுப்பூசிகளை வாங்க ஜப்பானிய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

SCROLL FOR NEXT