உலகம்

உக்ரைனில் வேகமெடுக்கும் கரோனா பாதிப்பு: தடுப்பு மருந்துக்காக உலக சுகாதார அமைப்புடன் பேச்சு

செய்திப்பிரிவு

உக்ரைனில் கடந்த 24 மணி நேரத்தில் 16,218 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது நாளாக உக்ரைனில் கரோனா அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து உக்ரைன் சுகாதாரத் துறை தரப்பில் கூறும்போது. உக்ரைனில் இரண்டாவது நாளாக தொடர்ந்து கரோனா அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 16, 218 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து உக்ரைனில் கரோனா பாதிப்பு 6,93,407 ஆக அதிகரித்துள்ளது. 11,909 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தி நிலையில் உலக சுகாதார அமைப்புடன் இணைந்து கரோனா தடுப்பு மருந்தை வாங்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

கடந்த ஏழு மாதங்களுக்கும் மேலாக கரோனா தடுப்பு மருந்தை உருவாக்கும் பணிகளில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. உருவாக்கப்படும் தடுப்பு மருந்துகள் பலகட்டப் பரிசோதனைகளுக்கு அனுப்பப்படும்போது எதிர்பாராத பலனை அளிக்காமல் போவதும், அதிக பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதுமாகவே இருந்தன.

இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த பைசர் நிறுவனம், ஜெர்மனியைச் சேர்ந்த பையோ எண்டெக் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ள தடுப்பு மருந்து மூன்றாம் கட்டப் பரிசோதனையில் 90 சதவீதம் பலன் அளித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கரோனாவுக்கான தடுப்பு மருந்து 50 சதவீதம் பலன் அளித்தாலே சாதகமான விஷயம் என்று கூறப்பட்டுவந்த நிலையில், பைசர் உருவாக்கிய தடுப்பு மருந்து 90 சதவீதம் பலன் அளித்திருப்பது உலகளாவிய மருந்துவக் குழுவினர்களுக்கு நம்பிக்கையை வழங்கியுள்ளது.

அமெரிக்காவைத் தொடர்ந்து ரஷ்யாவும் தான் தயாரித்த ஸ்புட்னிக்-5 என்ற கரோனா தடுப்பு மருந்து 92 சதவீதம் பலன் அளிப்பதாகத் தெரிவித்துள்ளது. அதேபோல் சீனா உருவாக்கியுள்ள தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்டப் பரிசோதனையில் உள்ளன.

லண்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தலைமையில் கண்டுபிடிக்கப்படும் கரோனா தடுப்பு மருந்து இறுதிக்கட்டப் பரிசோதனையில் உள்ளது. இப்பல்கலைக்கழகம் உருவாக்கிவரும் கோவிஷீல்டு தடுப்பூசி மூன்றாவது கட்டப் பரிசோதனையில் 90% பலன் அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT