உலகம்

நியூசிலாந்தில் நூற்றுக்கணக்கில் இறந்து கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்

செய்திப்பிரிவு

நியூசிலாந்தில் உள்ள சாதம் தீவுகளில் நூற்றுக்கணக்கான திமிங்கலங்கள் மற்றும் டால்பின்கள் இறந்து கரை ஒதுங்கியுள்ளன. இது சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து நியூசிலாந்து கடற்சார் அதிகாரிகள் தரப்பில், “நியூசிலாந்தின் சாதம் தீவுப்பகுதியில் நூற்றுக்கணக்கான திமிங்கலங்கள் மற்றும் டால்பின்கள் இறந்து கரை ஒதுங்கியுள்ளன. கரை ஒதுங்கிய இன்னும் சில திமிங்கலங்கள் உயிருடன் உள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாதம் தீவுகள் நியூசிலாந்திருந்து கிழக்கே 800 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பசிபிக் கடலின் முக்கியப் பகுதியாக இது உள்ளதால் இங்கு கடல்வாழ் உயிரினங்கள் அதிக அளவு வந்து சேருகின்றன. இதில் பல திமிங்கலங்கள் உயிரிழந்து கரை ஒதுங்குவது சமீப ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.

கடந்த 25 ஆண்டுகளாக ஆராய்ச்சிப் பணிகளுக்கு என்ற பெயரில் அண்டார்டிக், வடமேற்கு பசிபிக் கடல் பகுதிகளில் ஜப்பான் போன்ற சில நாடுகள் திமிங்கல வேட்டையில் ஈடுபட்டு வந்தன.

ஆனால், அந்த வேட்டையில் கொல்லப்படும் பெரும்பாலான திமிங்கலங்கள் ஆய்வுப் பணிகளுக்குப் பயன்படுத்துவதற்குப் பதில், பெரிய உணவு விடுதிகளில் உணவாகப் பரிமாறப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து திமிங்கல வேட்டை தடை செய்யப்பட்டடது.

இந்த நிலையில் காலநிலை மாற்றம் காரணமாக திமிங்கலங்கள் போன்ற கடல்வாழ் உயிரினங்களின் இறப்புகள் கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்து வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT