உலகம்

பாகிஸ்தானில் மொகரம் ஊர்வலத்தில் மனிதகுண்டு வெடித்து 22 பேர் பலி

ஏபி

பாகிஸ்தானில் மொகரம் ஊர்வலத்தின்போது மனித குண்டு வெடித்து 22 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

பாகிஸ்தானில் சன்னி, ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கு இடையே பகைமை நீடித்து வருகிறது. ஷியா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் நகரங்கள், மசூதிகளை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன.

மொகரம் தினத்தையொட்டி சிந்து மாகாணம் ஜேகோபா பாத் நகரில் நேற்றுமுன்தினம் ஊர்வலம் நடைபெற்றது. அப்போது அந்த ஊர்வலத்தில் ஊடுருவிய தற்கொலைப் படை தீவிரவாதி வெடித்துச் சிதறினான்.

இதில் குழந்தைகள் உட்பட 22 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இந்த தாக்குதலைக் கண்டித்து அரசுக்கு எதிராக ஜோகோபா பாத் பகுதி மக்கள் போலீஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் தடியடி நடத்தியும் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் விரட்டினர்.

ஜோகோபா பாத் நகரில் பதற்றம் நிலவுவதால் பாதுகாப்புப் பணியை ராணுவம் ஏற்றுக் கொண்டுள்ளது.

          
SCROLL FOR NEXT