அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் மோசடி செய்தே வெற்றி பெற்றதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், “அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். ஆனால் தேர்தலில் மோசடி நடந்துள்ளது” என்று தெரிவித்தார்.
தேர்தலில் நடந்த மோசடிகளை ஊடகங்கள் வெளிக்கொணரவில்லை என்றும் ட்ரம்ப் கடுமையாக குற்றம் சுமத்தினார்.
தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தாலும் முதல் முதலாக பைடன் வெற்றி பெற்றிருக்கிறார் என்று ட்ரம்ப் இறுதியாக ஒப்புக் கொண்டதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன், துணை அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட செனட்டர் கமலா ஹாரிஸ் இருவரும் வெற்றி பெற்றனர்
வெற்றிக்குத் தேவைப்படும் 270 பிரதிநிதி வாக்குகளில், 290 பிரதிநிதிகள் வாக்குகளைப் பெற்றதையடுத்து, தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அதிபர் ட்ரம்ப் 214 பிரதிநிதிகள் வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார். இதனைத் தொடர்ந்து தேர்தலில் மோசடி நடந்துள்ளதாகவும், இதனைச் சட்டரீதியாக எதிர்கொள்ள இருப்பதாகவும் ட்ரம்ப் தொடர்ந்து தெரிவித்து வந்தார்.
ஜனவரி 20 -ம் தேதி வரை ட்ரம்ப் அதிபர் பதவியில் இருப்பார். அதன் பிறகு ஜனநாயகக் கட்சியின் சார்பில் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் பதவியேற்பார்.
இந்த அதிகார மாற்றத்தை எந்தவித இடையூறுமில்லாமல் நடத்திக் கொடுக்கவும், ஜோ பைடனுக்கு ஒத்துழைக்குமாறும் ட்ரம்ப்புக்கு அமெரிக்காவில் நெருக்கடி அதிகமாகி வருவது குறிப்பிடத்தக்கது.