சிரிய அதிபர் ஆசாத்துக்குத் துணையாக இருக்கும் ராணுவ அதிகாரிகள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது.
சிரிய ராணுவ அதிகாரிகள், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோர் மீது அமெரிக்க அரசு பொருளாதாரத் தடை விதித்துள்ளதாக வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ கூறும்போது, “10 ஆண்டுகளாகத் தொடரும் சிரிய உள்நாட்டுப் போரைத் தடுக்கும் நடவடிக்கைகளில் ஆசாத் அரசு ஈடுபட வேண்டும். இல்லையென்றால் பொருளாதாரத் தடைகளைத் தடுக்கும் நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், சிரிய அதிபர் ஆசாத்துக்குத் துணையாக இருப்பவர்கள் மீது தொடர்ந்து பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும், ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்துவரும் சண்டை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இதில் ஆசாத்துக்கு ரஷ்யா ஆதரவளித்து வருகிறது. கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்தது.
ஐஎஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டுவிட்டன. இந்நிலையில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள சில இடங்களில் சண்டை அவ்வப்போது நடந்து வருகிறது.
சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போரில் லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சிரியப் போரில் ஆசாத்தின் அரசுப் படைகள் அப்பாவி மக்களைக் கொன்று குவித்ததாக அமெரிக்கா குற்றம் சுமத்தியது குறிப்பிடத்தக்கது.