ஈரானியர்கள் கரோனா வைரஸால் ஒரு பெரும் அழிவை எதிர்கொள்கிறார்கள் என்று அந்நாட்டு மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ஈரானின் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில்” ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 9,236 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6,92,949 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கரோனாவுக்கு ஈரானில் 38,291 பேர் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் உண்மையான நிலவரத்தை ஈரான் அரசு கூறவில்லை என்றும், கரோனா வைரஸால் ஈரான் மக்கள் பேரழிவை எதிர்கொள்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரானில் சமீப நாட்களாக கரோனா தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அங்கு பழைய கட்டுப்பாடுகள் மீண்டும் தொடங்கியுள்ளன. பொதுமக்கள் அதிக எண்ணிகையில் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜிம், உணவகங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்தியக் கிழக்கு நாடுகளில் ஈரானும், சவுதியும் கரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. 80 மில்லியன் மக்கள்தொகை கொண்ட ஈரான், கரோனா வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடாக உள்ளது.
ஈரானின் புனித நகரமான கூமிலில் பிப்ரவரி மாதத்தில் முதல் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து வட பகுதியில் உள்ள சுற்றுலா நகரமான கிலான் கடுமையான பாதிப்புக்குள்ளானது. தற்போது ஈரானின் எல்லைப் பகுதியில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
உலகம் முழுவதும் 5 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.