டெஹ்ரான்: ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையிலான போர் 15-வது நாளை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் இருப்பிடம் மற்றும் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்துள்ளது.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வெளியிட்ட சமீபத்திய வீடியோ ஒன்றில் அவருக்கு வலது கையில் ஆறு விரல்கள் இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளதால், அந்த வீடியோ செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டதா என்ற சந்தேகம் சமூக வலைதளங்களில் கிளம்பியுள்ளது.
கடந்த மார்ச் 13 அன்று நெதன்யாகு தனது எக்ஸ் பக்கத்தில் அமெரிக்கா-இஸ்ரேல் படைகள் ஈரான் மீது நடத்தி வரும் போர் குறித்துப் பேசும் வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவை கவனித்த பயனர்கள், அதில் அவர் தன் கையை அசைக்கும்போது ஒரு இடத்தில் ஆறு விரல்கள் தெரிவதாகச் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனையடுத்து #WhereisBibi என்ற ஹேஷ்டேக் உலக அளவில் டிரெண்ட் ஆகத் தொடங்கியது. நெதன்யாகு ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்டார் என்றும், தற்போது வெளியாகும் வீடியோக்கள் ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட போலி வீடியோக்கள் என்றும் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் பரவும் இந்த வதந்திகளை எக்ஸ் தளத்தின் க்ரோக் ஏஐ மறுத்துள்ளது. நெதன்யாகு அந்த வீடியோவில் ஐந்து விரல்களைக் கொண்டுள்ளார் என்றும், ஒளிப்பதிவு செய்யப்பட்ட கோணம் மற்றும் கையின் அசைவு காரணமாக ஏற்பட்ட ஒரு மாயத்தோற்றமே அது என்றும் விளக்கம் அளித்துள்ளது.
எனினும், இந்த வதந்திகளுக்கு அமெரிக்கா அல்லது இஸ்றேல் தரப்பில் இருந்து எந்தவித அதிகாரபூர்வ அறிக்கையும் வெளியாகவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.