பிரான்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் 60,000க்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பிரான்ஸ் சுகாதாரத் துறை தரப்பில், “பிரான்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் 60,486 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். வியாழக்கிழமை 58,000 பேர்வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிரான்ஸில் இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 39,800 பேர் கரோனாவுக்குப் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸில் மார்சேய் மற்றும் லியோன் ஆகிய நகரங்கள் கரோனா தொற்றால் அதிக பாதிப்பைச் சந்தித்துள்ளன. இதனால் அங்கு பள்ளிகள் மூடப்பட்டன.
ஊரடங்கு காலகட்டத்தில் 4,000 என்ற அளவில் பிரான்ஸில் கரோனா தொற்று ஏற்பட்டது. இந்த நிலையில் சமீபநாட்களாக கரோனா தொற்று மீண்டும் பரவி வருகிறது. இதனைத் தொடர்ந்து பிரான்ஸ் அதிபர் மக்ரோன் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த அதிகாரிகளுடன் சமீபத்தில் ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து அங்கு மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 4.9 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.
ஆனால், கரோனா பொது முடக்கத்தால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன. இதனால் பல நாடுகளில் கரோனா பரவத் தொடங்கியுள்ளது.