உலகம்

ரஷ்யாவில் கரோனா பாதிப்பு 17 லட்சத்தைத் தாண்டியது

செய்திப்பிரிவு

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் .

இதுகுறித்து ரஷ்ய சுகாதாரத் துறை தரப்பில், “ரஷ்யாவில் சில நாட்களாகக் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 19,404 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 லட்சத்தைத் தாண்டியுள்ளது. மேலும் 12, 238 பேர் கரோனாவுக்குப் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் சில நாட்களாகக் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கரோனா பரவலைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் காமாலியா தொற்றுநோய் தடுப்பு நுண் அறிவியல் ஆய்வு நிறுவனம் ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிறுவனத்துடன் இணைந்து தடுப்பு மருந்தைத் தயாரித்துள்ளது. ஸ்புட்னிக்-5 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்து கிளினிக்கல் பரிசோதனையில் 3-ம் கட்டத்துக்குச் செல்லவில்லை என்று கூறப்பட்டது.

இருப்பினும் மருந்தின் மீதான நம்பகத்தன்மையை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் தனது மகளுக்கே இந்த மருந்தைச் செலுத்தினார் ரஷ்ய அதிபர் புதின். ஆனால், ரஷ்யா கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிக்-5 கரோனா தடுப்பு மருந்து மீது முழுமையான நம்பிக்கை வராததால் உலக ஆய்வாளர்கள் தொடர்ந்து விமர்சித்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து தங்கள் தடுப்பூசி மருந்தை மூன்றாம் கட்டச் சோதனைகளுக்கு உட்படுத்தி வெற்றி பெற்றதாக ரஷ்யா அறிவித்தது.

ஆனால், ரஷ்யாவின் தடுப்பு மருந்து இன்னும் உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்படவில்லை. இந்த நிலையில் ரஷ்யா கண்டுபிடித்துள்ள இரண்டாவது கரோனா தடுப்பு மருந்துக்கு அதிபர் புதின் அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT