பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 271 பேர் கரோனாவுக்குப் பலியாகினர். இதனைத் தொடர்ந்து பிரேசிலில் கரோனாவுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 1,54,176 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து பிரேசில் சுகாதாரத் துறை தரப்பில், ''கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு 271 பேர் பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து பிரேசிலில் பலியானவர்களின் எண்ணிக்கை 1,54,176 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 52 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேசிலில் பிப்ரவரி மாதம் முதல் கரோனா தொற்று பரவத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து அங்கு கரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கான கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டன.
தென் அமெரிக்க நாடுகளில் பிரேசிலும், அர்ஜென்டினாவும் கரோனா வைரஸ் பரவலால் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன என்றும், தென் அமெரிக்காவின் கரோனா மையமாக பிரேசில் இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு முன்னரே தெரிவித்திருந்தது.
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 4 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.
ஆனால், கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர்.