உலகம்

அர்ஜெண்டினாவில் கரோனா பாதிப்பு 9 லட்சத்தைக் கடந்தது

செய்திப்பிரிவு

அர்ஜெண்டினாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்தைக் கடந்துள்ளது.

“அர்ஜெண்டினாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,524 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9,03,730 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 318 பேர் பலியாகினர். இதனால் கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 24,186 ஆக அதிகரித்துள்ளது’’ என்று அர்ஜெண்டினா சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

5 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். சமீபகாலமாக அர்ஜெண்டினாவில் கரோனா தொற்று அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து அங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தென் அமெரிக்க நாடுகளில் பிரேசில், அர்ஜெண்டினா, மெக்சிகோ ஆகிய நாடுகள் கரோனா தொற்றினால் அதிக பாதிப்பைச் சந்தித்துள்ளன.

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 3 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.

ஆனால், கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர்.

SCROLL FOR NEXT