உலகம்

பிரேசிலில் கரோனா பாதிப்பு 50 லட்சத்தைத் தாண்டியது

செய்திப்பிரிவு

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 31,553 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதுகுறித்து பிரேசிலின் சுகாதாரத் துறை தரப்பில், “பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 31,553 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பிரேசிலில் கரோனா பாதிப்பு 50 லட்சத்தைக் கடந்துள்ளது. பிரேசிலில் இதுவரை 50,00,694 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,48,228 பேர் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேசிலில் கரோனா பரவல் தீவிரமாக இருக்கும்போது, பல மாகாணங்களில் பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தென் அமெரிக்க நாடுகளில் பிரேசிலும், அர்ஜென்டினாவும் கரோனா வைரஸ் பரவலால் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன என்றும், தென் அமெரிக்காவின் கரோனா மையமாக பிரேசில் இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு முன்னரே தெரிவித்திருந்தது.

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 3 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.

ஆனால், கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர்.

SCROLL FOR NEXT