தலிபான்களுடனான பேச்சுவார்த்தைக்கு இடையே ஆப்கானிஸ்தானின் மத்தியப் பகுதியில் சாலையோரத்தில் நடந்த குண்டுவெடிப்பில் பொதுமக்கள் 14 பேர் பலியாகி உள்ளனர்.
இதுகுறித்து ஆப்கன் ராணுவ அமைச்சகம் தரப்பில், “ஆப்கானிஸ்தானின் மத்தியப் பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) சாலையோரப் பகுதியில் நடந்த குண்டுவெடிப்பில் பொதுமக்கள் 14 பேர் பலியாகி உள்ளனர். இதில் 7 பேர் பெண்கள். 5 பேர் சிறுவர், சிறுமியர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும், குண்டுவெடிப்புக்குப் பயன்படுத்தப்பட்டுள்ள ஆயுதங்களைப் பார்க்கும்போது இதனை தலிபான்கள் நடத்தி இருக்கலாம் என்று ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் தோஹாவில் ஆப்கன் அரசுக்கும், தலிபான்களுக்கும் இடையே நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் தங்களால் கடத்தப்பட்ட ராணுவ வீர்ரகளைத் தலிபான்கள் விடுவித்தனர். இந்த நிலையில் இந்தத் தாக்குதலைத் தலிபான்கள் நடத்தியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடனான போரை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், தலிபான்களை அவ்வப்போது ஆப்கன் அரசு விடுவித்து வருகிறது. மேலும், ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தலிபான்கள் இடையே கத்தாரில் நடைபெறும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அதிபர் அஷ்ரப் கானி சம்மதம் தெரிவித்திருந்தார்.
முன்னதாக, ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடனான போரை முடிவுக்குக் கொண்டு வர அவர்களின் நிபந்தனைகளை ஏற்று 900 தலிபான்கள் விடுதலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.