அமெரிக்காவில் கரோனா பாதிப்பு 70 லட்சத்தைக் கடந்துள்ளது.
இதுகுறித்து ராய்ட்டர்ஸ் வெளியிட்ட செய்தியில், “அமெரிக்காவில் 71,90,480 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு நாளும் சுமார் 700 பேர்வரை கரோனா வைரஸால் பலியாகின்றனர். இதுவரை கரோனா பலி 2 லட்சத்தைக் கடந்துள்ளது.
அமெரிக்காவின் தென் பகுதியில் தொடர்ந்து கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. உலகின் கரோனா தொற்று எண்ணிக்கையில் 20% அமெரிக்காவில் உள்ளது” என்று தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் கரோனா பாதிப்பில் கலிபோர்னியா மாகாணம் முதலிடத்தில் உள்ளது. கலிபோர்னியாவில் கரோனா பாதிப்பு 8 லட்சத்தை நெருங்கவுள்ளது. பலி எண்ணிக்கையில் நியூயார்க் முதலிடத்தில் உள்ளது. நியூயார்க்கில் இதுவரை 33 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவுக்குப் பலியாகி உள்ளனர்.
சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கரோனா வைரஸால் தற்போது உலகம் முழுவதும் 3 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
உலக நாடுகள் அனைத்தையும் கரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில், இதற்கான தடுப்பு மருந்துகளைக் கண்டறியும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, இந்தியா, சீனா உள்ளிட்ட சில நாடுகளில் இந்தக் கரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளன. குறிப்பாக, ரஷ்யாவின் ஸ்புட்னிக் -5 என்ற பெயரிலான தடுப்பு மருந்து விரைவில் சந்தைக்கு வரவுள்ளது.