ஆப்கானிஸ்தானில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இடையே தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 14 ராணுவ வீரர்கள் பலியாகினர்.
இதுகுறித்து ஆப்கானிஸ்தான் ராணுவம் தரப்பில், “ஆப்கானிஸ்தானில் உருஸ்கான் மாகாணத்தில் உள்ள சோதனைச் சாவடியில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் 14 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். தொடர்ந்து தலிபான்களுடன் ஆப்கன் ராணுவ வீரர்கள் சண்டையிட்டு வருகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் தோஹாவில் ஆப்கன் அரசுக்கும், தலிபான்களுக்கும் இடையே நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் தங்களால் கடத்தப்பட்ட ராணுவ வீர்ரகளைத் தலிபான்கள் விடுவித்தனர். இந்த நிலையில் இந்தத் தாக்குதலை தலிபான்கள் நடத்தியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடனான போரை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், தலிபான்களை அவ்வப்போது ஆப்கன் அரசு விடுவித்து வருகிறது.
மேலும், ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தலிபான்கள் இடையே கத்தாரில் நடைபெறும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அதிபர் அஷ்ரப் கானி சம்மதம் தெரிவித்திருந்தார்.
முன்னதாக, ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடனான போரை முடிவுக்குக் கொண்டு வர அவர்களின் நிபந்தனைகளை ஏற்று 900 தலிபான்கள் விடுதலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.