கடந்த இரண்டு வாரங்களில் கோவிட்-பாசிட்டிவ் சான்றிதழ்களுடன் பயணிகளை இரண்டு முறை அழைத்து வந்ததாக கூறி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களுக்கு அக்டோபர் 2 -ம் தேதி வரை தடை செய்வதாக துபாய் விமானதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து துபாயின் மூத்த உயர் அதிகாரிகள் தரப்பில், “ செப்டம்பர் 2 ஆம் தேதியில் கோவிட்-பாசிட்டிவ் சான்றிதழ் பெற்ற ஒரு பயணி, செப்டம்பர் 4 -ம் தேதி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஜெய்ப்பூர்-துபாய் விமானத்தில் பயணம் செய்தார். இதற்கு முன்னரும் இம்மாதிரியான சம்பவம் நடந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவங்களை தொடர்ந்து அக்டோபர் 2 -ம் தேதிவரை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களுக்கு துபாயில் தடை விதிக்கப்படுகிறது என்று ஐக்கிய அமீரகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து துபாய்க்கு வருபவர்கள் கடந்த 96 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட கரோனா மருத்துவ பரிசோதனையில் கரோனா நெகடிவ் என்ற சான்றிதழலை பெற்றிருக்க வேண்டும் என்று ஐக்கிய அமீரகம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் இவ்வாறான முறைகேடு நடந்துள்ளது.
ஐக்கிய அமீரகத்தில் இதுவரை 78 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 68 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக ஐக்கிய அமீரகத்தில் 1000 என்ற அளவில் கரோனா பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து கரோனா தடுப்பு நடவடிக்கையில் அந்நாட்டு அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.