ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி தங்கியிருந்த ஓட்டல் அறையிலேயே அவருக்கு விஷம் வைத்துக் கொடுக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து அலெக்ஸி நவால்னியின் குழுவினர் வெளியிட்ட அறிக்கையில், “அலெக்ஸி நவால்னி விமானத்தில் ஏறிய சில நிமிடங்களில் மயங்கி விழுந்தார். இதனைத் தொடர்ந்து அவர் பெர்லினில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
எங்களது குழு ஆகஸ்ட் 20 ஆம் தேதி அலெக்ஸி தங்கி இருந்த ஓட்டல் அறையில் ஆய்வு செய்தது. அதில் காலி பிளாஸ்டிக் மினரல் வாட்டர் பாட்டில்கள் கிடைத்தன. அதனை நாங்கள் ஜெர்மன் ஆய்வகத்துக்கு அனுப்பினோம். அதன் முடிவில் அலெக்ஸி நவால்னிக்கு விமானத்தில் விஷம் வைக்கப்படவில்லை என்று எங்களுக்குத் தெரிந்தது. வாட்டர் பாட்டிலில்தான் விஷம் வைக்கப்பட்டுள்ளது என்று புரிந்து கொண்டோம்” என்று தெரிவித்துள்ளனர்.
அலெக்ஸி நவால்னிக்கு விஷம் வைக்கப்பட்டது தொடர்பாக, தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்று அவரது குழுவினர் தெரிவித்துள்ளனர்.
அலெக்ஸி நவால்னிக்கு விஷம் வைக்கப்பட்டதை ஜெர்மனி அரசு சமீபத்தில் உறுதிப்படுத்தியது. ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் ஜெர்மனி தெரிவித்தது.
மேலும், அலெக்ஸி நவால்னிக்கு விஷம் வைக்கப்பட்டது தொடர்பாக தங்களுக்கு ஆதாரம் கிடைத்துள்ளதாக ஜெர்மனி தெரிவித்தது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை ரஷ்யா முற்றிலுமாக மறுத்துள்ளது. இந்த நிலையில் அலெக்ஸி நவால்னியிடம் விசாரணை நடத்த ரஷ்யா முயன்று வருகிறது.
ரஷ்ய அதிபர் புதினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையாக விமர்சித்து வந்தவர் அலெக்ஸி நவால்னி. ரஷ்ய அதிபர் தேர்தலின்போதும் தொடர் பிரச்சாரங்களில் ஈடுபட்ட அலெக்ஸி நவால்னிக்கு இளைஞர்கள் மத்தியில் பரவலான வரவேற்பு இருந்தது.
ஆனால், புதின் அரசு அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி, அவரைத் தேர்தலில் போட்டியிட முடியாமல் செய்தது. இருப்பினும் அலெக்ஸி நவால்னி தொடர்ந்து பொதுவெளியில் புதின் அரசை விமர்சித்து வந்தது குறிப்பிடத்தக்கது.