ரஷ்ய எதிர்க் கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னி கோமா நிலையிலிருந்து மீண்டுவிட்டதாக ஜெர்மனி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பெர்லின் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “அலெக்ஸி கோமா நிலையிலிருந்து மீண்டுவிட்டார். அவருக்கு தொடர்ந்து செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளது.
இந்தத் தகவலை அலெக்ஸி நவால்னியின் மனைவியும் உறுதிப்படுத்தி இருக்கிறார்.
கடந்த வாரம்தான் அலெக்ஸி நவால்னிக்கு விஷம் வழங்கப்பட்டதை ஜெர்மனி அரசு உறுதிப்படுத்தியது. மேலும்,
ரஷ்ய எதிர்க் கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னிக்கு புதின் விஷம் வைத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பாக ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று ஜெர்மனி தெரிவித்துள்ளது. மேலும் அலெக்ஸி நவால்னிக்கு விஷம் வைக்கப்பட்டது தொடர்பாக தங்களுக்கு ஆதாரம் கிடைத்துள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது.
ஆனால் இந்தக் குற்றச்சாட்டை ரஷ்யா முற்றிலுமாக மறுத்துள்ளது. ரஷ்ய அதிபர் புதினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையாக விமர்சித்து வந்தவர் அலெக்ஸி நவால்னி. ரஷ்ய அதிபர் தேர்தலின்போதும் தொடர் பிரச்சாரங்களில் ஈடுபட்ட அலெக்ஸி நவால்னிக்கு இளைஞர்கள் மத்தியில் பரவலான வரவேற்பு இருந்தது.
ஆனால், புதின் அரசு அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி, அவரைத் தேர்தலில் போட்டியிட முடியாமல் செய்தது. இருப்பினும் அலெக்ஸி நவால்னி தொடர்ந்து பொதுவெளியில் புதின் அரசை விமர்சித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை டாம்ஸ்க் நகரிலிருந்து மாஸ்கோவுக்கு விமானத்தில் செல்லும்போது அலெக்ஸி மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாம்ஸ்க் விமான நிலையத்தில் அலெக்ஸி குடித்த டீயில் விஷம் கலந்து இருக்கலாம் என்று அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டினர்.
மேலும், ரஷ்யாவில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டால் புதின் அரசால் அவரது உயிருக்குப் பாதுகாப்பு இல்லை என்று பெர்லின் அழைத்துச் செல்லப்பட்டு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அலெக்ஸிக்கு நேர்ந்தது குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா ஆகிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன.