புவி வெப்பமயமாதலை தடுக்க அமெரிக்க தொழிற்சாலைகள் வெளியேற்றும் கார்பன் அளவைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா பேசினார்.
அமெரிக்க அதிபர் ஒபாமா ஆர்க்டிக் வளைவில் இருக்கும் அலாஸ்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். வெப்பமயமாதலால் ஏற்கெனவே அழிந்துகொண்டிருக்கும் அலாஸ்காவின் பகுதிகளை அவர் முதல்முறையாக பார்வையிட்டார்.
அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் பேசிய அமெரிக்க அதிபர் ஒபாமா, "காலநிலை மாற்றம் குறித்து உலக மக்களுக்கு எடுத்துரைக்கும் பணியை ஈடுபட்டுவருகிறோம். ஆனால் நீங்கள் ஏற்கெனவே அத்தகையச் சூழலில் தான் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள்.
உலக மக்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் எதிர்பார்த்து தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உலக அளவில் ஆர்க்டிக் வளைவின் வெப்பநிலை இரட்டிப்பாக அதிகரித்து வருகிறது. இதனை அனைத்து மக்களும் உணரவேண்டியது அவசியம்" என்றார்.
ஆர்க்டிக் வட்டத்தில் அமைந்திருக்கும் அலாஸ்கா பகுதியில் சுமார் ஒரு லட்சம் பேர் மிகவும் ஆபத்தானச் சூழலில் வாழ்ந்து வருவதாக ஏற்கெனவே அதன் அரசு அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.