ஆஸ்திரேலியாவில் விக்டோரியா மாகாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 73 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஜூலை மாதத்திற்குப்பிறகு விக்டோரியா ஏற்பட்ட குறைந்தபட்ச தொற்று இதுவாகும்.
இதுகுறித்து விக்டோரியா மாகாண அதிகாரிகள் தரப்பில்,”விக்டோரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 73 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. கடந்த 2 மாதங்களுக்குப் பிறகு விக்டோரியாவில் குறைந்தபட்ச எண்ணிக்கையில் தொற்று பதிவாகி உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விக்டோரியாவில் ஜூலை மாதம் முன்றிலக்க எண்ணிக்கையில் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் தொற்று குறைந்துள்ளது.
மெல்போர்னிலும் கரோனா தொற்று குறைந்துள்ளது. இந்த நிலையில் செப்டம்பர் மாதம்13 ஆம் தேதி ஊரடங்கு தொடரும் என்று ஆஸ்திரேலியாவில் அரசு தெரிவித்துள்ளது.
விக்டோரியா மாகாணத்தில் கரோனா பரவல் அதிகமாக உள்ளதைத் தொடர்ந்து, அங்கு கரோனா பரிசோதனை அதிகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆறு வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் மற்றும் விக்டோரியா மாகாணங்களில் கரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. அதனைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக முன்னரே ராணுவம் அழைக்கப்பட்டிருந்தது.
ஆஸ்திரேலியாவில் கரோனா ஓரளவு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், 2020 ஆம் ஆண்டுவரை எல்லை மூடலைத் தொடர இருப்பதாக அந்நாடு தெரிவித்திருந்தது. ஆஸ்திரேலியாவில் இதுவரை 25,746 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 652 பேர் பலியாகி உள்ளனர்.