ஹாங்காங்கில் இன்னும் சில தினங்களில் கரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஹாங்காங் அதிகாரிகள் தரப்பில், “ஹாங்காங்கில் கரோனா பரவல் சில நாட்களாகக் குறைந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து அங்கு கரோனா காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
ஹாங்காங்கில் ஜூலை மாதம் உள்ளூர் தொற்றுகள் அதிகமாயின. இதன் காரணமாக கரோனா தொற்று அங்கு அதிகமானது. மூன்று இலக்க எண்களில் கரோனா தொற்றுகள் பதிவாயின. தற்போது கரோனா தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளதால் தளர்வுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் (ஆகஸ்ட் 28 ஆம் தேதி) இந்தத் தளர்வுகள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.
கடந்த ஒரு மாதமாகவே ஹாங்காங்கில் மூன்றிலக்க எண்களில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் பொது இடங்களில் மக்கள் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டது. பள்ளிகளும் மூடப்பட்டன.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் ஐந்து மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளின் செயல்பாட்டை முடக்கியுள்ளது. கரோனாவினால் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன.
தென் கொரியா, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகள் கரோனா பாதிப்பிலிருந்து மீண்ட நிலையில் மீண்டும் அங்கு கரோனா பரவல் தொடங்கியுள்ளது.
உலகம் முழுவதும் 2.2 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.