பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக 1000க்கும் குறைவாக கரோனா தொற்றுகள் உறுதிச் செய்யப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், “ கடந்த மாதம் பாகிஸ்தானில் கரோனா தொற்று தீவிரமாக இருந்து வந்த நிலையில் இம்மாதத்தில் கரோனா தொற்று குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் பாகிஸ்தானில் 613 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 11 பேர் பலியாகி உள்ளனர்.
செவ்வாய்க்கிழமையும் பாகிஸ்தானில் 617 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. பாகிஸ்தானில் இதுவரை 2,90,445 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6,201 பேர் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பாகிஸ்தானில் கரோனா பாதிப்பு உண்மையில் குறைந்துவிட்டதா? அல்லது மருத்துவ பரிசோதனைகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டதன் காரணமாக தொற்று குறைவாக காணப்படுகின்றதா என கேள்வி எழத் தொடங்கி உள்ளன.
முன்னதாக பாகிஸ்தானில் கரோனா வைரஸ் காரணமாக அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஆகஸ்ட் 10 -ம் தேதி தளர்த்தப்படும் என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்தது. இதனை தொடர்ந்து விமான போக்குவரத்து அறிவிப்பை பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தானில் சிந்து மற்றும் பஞ்சாப் மாகாணங்கள் கரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானில் இதுவரை 19 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் ஜூன் மாதத்தில் கரோனா பரவல் அதிகமாக இருந்தது. இந்தநிலையில் நாட்டின் பொருளாதாரத்தைச் சுட்டிக்காட்டி, பிரதமர் இம்ரான்கான் ஊரடங்கை அமல்படுத்தாமல் இருந்தார்.
இந்த நிலையில் கடும் விமர்சனங்கள் எழுந்ததால், கரோனா தொற்று அதிகமாக உள்ள பஞ்சாப், சிந்து மாகாணங்களில் ஸ்மார்ட் லாக்டவுனை பாகிஸ்தான் அரசு கடந்த மாதம் அறிமுகப்படுத்தியது. அதன்படி, வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் பாகிஸ்தான் அரசு இறங்கி உள்ளது.