பாகிஸ்தானில் புதிதாக 753 பேருக்குக் கரோனா நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “பாகிஸ்தானில் புதிதாக 753 பேருக்குக் கரோனா நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,86,773 ஆக அதிகரித்துள்ளது. பாகிஸ்தானில் இதுவரை கரோனாவுக்கு 6,139 பேர் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் சிந்து, பஞ்சாப் மாகாணங்களில் கரோனா தொற்று அதிகம் ஏற்பட்டுள்ளது. சிந்து மாகாணத்தில் 1,24,929 பேருக்கும், பஞ்சாப் மாகாணத்தில் 94,865 பேருக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் சிந்து மற்றும் பஞ்சாப் மாகாணங்கள் கரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானில் இதுவரை 19 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் ஜூன் மாதத்தில் கரோனா பரவல் அதிகமாக இருந்தது. இந்நிலையில் நாட்டின் பொருளாதாரத்தைச் சுட்டிக்காட்டி, பிரதமர் இம்ரான்கான் ஊரடங்கை அமல்படுத்தாமல் இருந்தார். கடும் விமர்சனங்கள் எழுந்ததால், கரோனா தொற்று அதிகமாக உள்ள பஞ்சாப், சிந்து மாகாணங்களில் ஸ்மார்ட் லாக்டவுனை பாகிஸ்தான் அரசு கடந்த மாதம் அறிமுகப்படுத்தியது. அதன்படி, வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள் செயல்படத் தடை விதிக்கப்பட்டது.இந்த நிலையில் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் பாகிஸ்தான் அரசு இறங்கியுள்ளது.