அமெரிக்காவில் கரோனா வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,60,000-ஐக் கடந்துள்ளது.
“அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,203 பேர் கரோனா தொற்றுக்குப் பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து கரோனா பலி எண்ணிக்கை 1,62,804 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 58,611 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அமெரிக்காவில் 50,32,179 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் இதுவரை 22,92,707 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் அதிகபட்சமாக கலிபோர்னியா மற்றும் புளோரிடா மாகாணங்களில் 5 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் இதுவரை 6 கோடிக்கும் அதிகமானவர்களுக்குக் கரோனா மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் ஊரடங்கு தளர்த்தப்பட்டபின் மக்கள் சமூக விலகலைக் கடைப்பிடிக்காமலும், முகக்கவசம் அணியாமலும் தொடர்ந்து வெளியில் நடமாடி வருவது அதிகரித்து வருகிறது. மதுபான விடுதிகள், ரெஸ்டாரன்ட்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் போன்றவற்றில் கூடும் அமெரிக்க மக்கள், சமூக விலகலைக் கடைப்பிடிக்காமல் முகக்கவசம் அணியாமல் வருவது மீண்டும் கரோனா பரவல் அதிகரிக்கக் காரணமாக அமைந்துள்ளது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.