அமெரிக்காவில் பலருக்கும் தபாலில் மர்ம விதைகள் பார்சலில் வருவதால் அங்கு பீதி எழுந்துள்ளது. இந்தப் பார்சல்கள் சீனாவிலிருந்து வருவதாக இருக்கலாம், ஓர் உயிரி ஆயுதமாக இருக்கலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்த விதைகளை யாரும் அவசரப்பட்டு நிலத்தில் விதைக்க வேண்டாம், அது விவசாயத்தை அழிக்கும் உயிரி ஆயுதமாக இருக்கலா என்று கனடாவும் எச்சரிக்கை விடுத்துள்ளது என்று குளோபல் நியூஸ் பப்ளிகேஷன்ஸ் செய்தி தெரிவிக்கிறது.
இது தொடர்பாக அமெரிக்க விவசாயத்துறை சுங்கத்துறையினர் மற்றும் எல்லை அதிகாரிகளுடன் அமெரிக்க உளவு முகமையுடன் இணைந்து விசாரித்து வருகின்றனர்.
அமெரிக்காவில் அலபாமா, கொலராடோ, ப்ளோரிடா, லோவா, கன்சாஸ், ஜார்ஜியா, டெக்சாஸ், உள்ளிட்ட 28 மாகாணங்களில் உள்ளவர்களுக்கு கடந்த சில நாட்களாக இத்தகைய மர்ம பார்சல்கள் வருகின்றன. அதில் சிறிய பிளாஸ்டிக் பையில் விதைகள் இருக்கின்றன.
இதனையடுத்து அந்தந்த மாகாண அமெரிக்க வேளாண் துறை அதிகாரிகள் இத்தகைய விதைகளை வந்து எடுத்துச் செல்கின்றனர், இதை மேலும் ஆய்வுக்குட்படுத்த உள்ளனர்.
ஆனால் சீனா இதை கடுமையாக மறுத்துள்ளது, தபால் மூலம் சீனாவிலிருந்து விதைகளை அனுப்ப அனுமதி கிடையாது.அந்த விதைப்பார்சலில் உள்ள தபால் முத்திரைப் போலியானது என்றும் அதன் மேல் குறிப்பிடப்பட்ட தகவல்கள் பிழையானவை என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த பார்சல்களை சீனாவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் சீனாவே இதை விசாரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
கனடாவில் பண்ணை விவசாயம் செய்யும் பலருக்கு இத்தகைய விதைகள் பார்சலில் வந்துள்ளன. இதனை கனடா, அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் விசாரித்து வருகின்றன.