உலகம்

கரோனா பாதிப்பு: 80,000 பேரை வெளியேற்றும் வியட்நாம்

செய்திப்பிரிவு

வியட்நாமில் பிரபல சுற்றுலாத் தளமான டா நாங் பகுதியில் கரோனா பரவல் தீவிரமாக இருப்பதைத் தொடர்ந்து அங்குள்ள சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றப்பட உள்ளனர்.

இதுகுறித்து வியட்நாம் அரசுத் தரப்பில், “வியட்நாமின் பிரபல சுற்றுலாப் பகுதிகளில் ஒன்று டா நாங். இங்கு கடந்த சனிக்கிழமை சுற்றுலாப் பயணி ஒருவருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரண்டு பேருக்குக் கரோனா தொற்று அங்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது அங்குள்ள சுற்றுலாப் பயணிகளை வெளியேற்றும் நடவடிக்கை வேகமாக நடந்து வருகிறது. சுற்றுலாப் பயணிகள் உட்பட 80,000 பேர் அப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட உள்ளனர். நான்கு நாட்களில் அவர்கள் வெளியேற்றப்பட உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியட்நாமில் கடந்த நூறு நாட்களாக யாருக்கும் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ், ஐந்து மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளின் செயல்பாட்டை முடக்கியுள்ளது.

கரோனாவினால் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன. தென் கொரியா, நியூசிலாந்து, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகள் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளன.

உலகம் முழுவதும் சுமார் 1.6 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

SCROLL FOR NEXT