பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 23,000க்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 600க்கும் மேலானவர்கள் பலியாகி உள்ளனர்.
இதுகுறித்து பிரேசில் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், ''பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 23,284 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக பிரேசிலில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,42,375 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று மட்டும் கரோனாவுக்கு 600க்கும் மேலானவர்கள் பலியாகி உள்ளனர். பிரேசிலில் இதுவரை 87,618 பேர் கரோனா வைரஸ் பாதிப்பால் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லத்தீன் அமெரிக்க நாடுகளில் பிரேசில், கரோனா வைரஸால் அதிக பாதிப்பைச் சந்தித்துள்ளது. கடந்த சனிக்கிழமை மட்டும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் 50,000க்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, கரோனா பரவலின் மையமாக பிரேசில் விளங்குவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் ஐந்து மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளின் செயல்பாட்டை முடக்கியுள்ளது. கரோனாவினால் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன.
தென் கொரியா, நியூசிலாந்து, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகள் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளன.