உலகம்

எங்கள் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும்: ஈரான்

செய்திப்பிரிவு

ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும் என்று அதிபர் ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார்.

ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி எஃகு மற்றும் வேதியியல் தொழிற்சாலைகள் தொடர்பான கூட்டத்தில் திங்கட்கிழமை பங்கேற்றுப் பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், “அனைத்துத் தயாரிப்புகளும் எங்களுக்கு மிகவும் மதிப்புமிக்கவை. வேலைவாய்ப்பு, ஏற்றுமதி, இலக்கு சந்தைகளைக் கைப்பற்றுதல் என உலகில் உயர்ந்த நிலையை அடைவதற்கு அடிப்படையானது உற்பத்தி ஆகும்.

எண்ணெய் ஏற்றுமதியைத் தவிர்த்து கெமிக்கல் மற்றும் எஃகு தொழிற்சாலைகள் ஏற்றுமதிகளின் பெரும் சுமையைச் சுமக்கின்றன. அவை அந்நியச் செலாவணிகளைப் பூர்த்தி செய்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கின்றன. ஆனால், பொருளாதாரத் தடை ஈரான் மீது அழுத்தத்தைச் செலுத்துகின்றது. ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும்” என்று ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார்.

அணு ஆயுதச் சோதனை தொடர்பாக அமெரிக்கா - ஈரான் இடையே மோதல் வலுத்து வரும் நிலையில், சவுதி அரேபியாவுக்குச் சொந்தமான எண்ணெய்க் கப்பல்கள் மீது சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரான்தான் காரணம் என்று அமெரிக்கா குற்றம் சாட்டியது.

இப்படித் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வந்த நிலையில் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. ஈரான் மீதும் அதன் முக்கியத் தலைவர்கள் மீதும் புதிய பொருளாதாரத் தடையை ட்ரம்ப் அறிவித்தார்.

அமெரிக்காவின் பொருளாதாரத் தடை காரணமாக ஈரானின் பொருளாதாரம் பெருமளவு பாதிப்புக்குள்ளானது. பொதுமக்கள் பலர் ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானியின் ஆட்சிக்கு எதிராகத் தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.

இந்தப் போராட்டங்களுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆதரவு அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT