உள்நாட்டுப் போர் நடக்கும் ஆப்கானிஸ்தானில் மக்களின் இறப்பு விகிதம் 13% குறைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட இன்று (திங்கட்கிழமை) கூறும்போது, “ஆப்கானிஸ்தானில் இறப்பு விகிதம் இந்த வருடத்தின் முதல் பகுதியில் 13% ஆகக் குறைந்துள்ளது. வன்முறைச் சம்பவங்களும் குறைந்துள்ளன. மேலும், வெளிநாட்டுப் படைகளின் தாக்குதலும், ஐஎஸ் தீவிரவாதிகளின் தாக்குதலும் ஆப்கானிஸ்தானில் குறைந்துள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகளுக்கும், தலிபான்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் அதிகரித்து வருவதாகவும். இதனால் பொதுமக்களின் இறப்பு அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடனான போரை முடிவுக்குக் கொண்டு வர தலிபான்களின் நிபந்தனைகளை ஏற்று 900 தலிபான்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
மேலும், ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தலிபான்கள் இடையே கத்தாரில் நடைபெறும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அதிபர் அஷ்ரப் கானி சம்மதம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும், அரசுப் படைகளுக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது.