உலகம்

சீனாவில் ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு அதிகபட்சமாக ஒரே நாளில் 61 பேர் கரோனாவால் பாதிப்பு

செய்திப்பிரிவு

சீனாவில் ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு புதிதாக 61 பேருக்கு ஒரே நாளில் கரோனா நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “சீனாவில் கடந்த ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு அதிகபட்சமாக 61 பேருக்குப் புதிதாக கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும், வெளிநாடுகளிலிருந்து வந்த 4 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உரும்கி நகரில் ஏற்பட்டுள்ள கரோனா பரவல் காரணமாக மீண்டும் சீனாவில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சீன கடற்கரை நகரமான தலியனில் கரோனா மருத்துவப் பரிசோதனைகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் சின்ஜியாங் மாகாணத்தில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

கடுமையான ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் விளைவாக, சீனாவில் இந்த நோய்த்தொற்று கடந்த ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் முழுவதுமாகக் கட்டுக்குள் வந்தது.

இந்நிலையில், சீனத் தலைநகர் பெய்ஜிங் அருகே உள்ள அக்சின் என்ற பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. அங்குள்ள ஓர் இறைச்சி சந்தையில் பணிபுரிவோரிடம் இருந்து இந்த வைரஸ் பரவியிருக்கக் கூடும் எனச் சந்தேகிக்கப்பட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெய்ஜிங் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக பெய்ஜிங்கில் கரோனா பரவல் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT