உலகம்

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 67,632 பேர் கரோனாவால் பாதிப்பு

செய்திப்பிரிவு

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 67,632 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்காவில் இயங்கும் மருத்துவ பல்கலைகழகமான ஜான்ஸ் ஹாப்கின்ஸ் கூறும்போது, “ கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 67,632 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கரோனாவால் இதுவரை 36,17,040 பேர் கரோனாவால் பாதிப்பு” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் கரோனா தொற்று மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.புளோரிடா, அரிசோனா மாகாணங்களில் மட்டுமல்ல நிவாதா, ஓக்லஹாமா போன்ற மாகாணங்களிலும் கரோனா வேகமாகப் பரவுகிறது. கடந்த 14 நாட்களாக அமெரிக்காவில் கரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை கூடுதலாக அதிகரித்துள்ளது.

கரோனா பரவல் நீடித்து வந்தபோதிலும் கடந்த மாதத்தில் அமெரிக்காவில் உணவு விடுதிகள், மதுபானக் கூடங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், தேவாலயங்கள் ஆகியவை டெக்சாஸ், அரிசோனா உள்ளிட்ட மாகாணங்களில் திறக்கப்பட்டன. இதனால் மக்கள் புழக்கம் அதிகரித்தது.

குறிப்பாக கலிபோர்னியா, நியூயார்க், டெக்சாஸ், புளோரிடா மாகாணங்களில் 2 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT