பிரதிநிதித்துவப்படம் 
உலகம்

கரோனா வைரஸுக்கு எதிரான உலகின் முதல் தடுப்பு மருந்து? மனிதர்கள் மீதான பரிசோதனை வெற்றிகரமாக முடிந்ததாக ரஷ்யா அறிவிப்பு: எப்படி நடத்தப்பட்டது?

ஏஎன்ஐ

கரோனா வைரஸால் உலக அளவில் 1.20 கோடி மக்கள் பாதிப்பு, 5 லட்சத்துக்கும் மேலான மக்கள் உயிரிழப்புக்குப் பின், உலகிலேயே முதல் முறையாக கரோனா வைரஸுக்குத் தடுப்பு மருந்தை வெற்றிகரமாகக் கண்டுபிடித்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

மனிதர்கள் மீதான கிளினிக்கல் பரிசோதனையை வெற்றிகரமாக முடித்துவிட்டதாகவும், அவர்கள் மீது பரிசோதிக்கப்பட்டது வெற்றிகரமாக அமைந்துள்ளதாகவும் ரஷ்யாவில் உள்ள செச்சினோவ் பர்ஸ்ட் மாஸ்கோ ஸ்டேட் மெடிக்கல் யுனிவர்சிட்டி தெரிவித்துள்ளது.

இந்தப் பல்கலைக்கழகத்தின் ட்ரான்ஸ்லேஷனல் மெடிஸின் அன்ட் பயோடெக்னாலஜி துறையின் இயக்குநர் வாடிம் டாராசோவ் ஸ்புட்னிங், செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில், “கரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்தை உலகிலேயே முதல் நாடாக ரஷ்யா கண்டுபிடித்துள்ளது.

இந்த மருந்தை மனிதர்களின் உடலில் செலுத்திப் பரிசோதிக்கும் கிளினிக்கல் முறையை வெற்றிகரமாக முடித்துள்ளோம்.

இந்த கிளினிக்கல் பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர்கள் முதல் கட்டமாக வரும் புதன்கிழமை மருத்துவமனையிலிருந்து அனுப்பப்படுகின்றனர். அடுத்தகட்டத் தன்னார்வலர்கள் 20-ம் தேதி அனுப்பிவைக்கப்படுவார்கள்.

ரஷ்யாவின் கமாலேயே தொற்றுநோய் மற்றும் நுண்உயிரியல் நிறுவனம் இந்தத் தடுப்பு மருந்தைத் தயாரித்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

செச்சினோவ் பல்கலைக்கழகத்தின் வெப்பமண்டல மெடிக்கல் பாரசிட்டாலஜி அமைப்பின் இயக்குநர் அலெக்சாண்டர் லுக்காசேவ் கூறுகையில், “இந்த மருந்தை முதல் கட்டமாக விலங்குகளுக்கும் கொடுத்து பரிசோதனை செய்ததில் வெற்றி கிடைத்தது. அதன்பின் மனிதர்களுக்கான கிளினிக்கல் பரிசோதனையும் வெற்றியாக அமைந்துள்ளது. தடுப்பு மருந்து பாதுகாப்பானது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

செச்னோவ் பல்கலைக்கழகம் என்பது கரோனா வைரஸ் பெருந்தொற்று பரவும் நேரத்தில் கல்வி நிறுவனமாக மட்டும் செயல்படாமல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வுகளிலும் ஈடுபட்டு இதுபோன்ற தொற்று நோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபடும்.

இந்தத் தடுப்பு மருந்துடன் பணியாற்றியுள்ளோம், கிளினிக்கல் பரிசோதனைக்கு முந்தைய நிலை, பாதுகாப்பு அம்சம், கிளினிக்கல் பரிசோதனை அனைத்தும் முடிந்துள்ளது. இருப்பினும் கிளினிக்கல் பரிசோதனை தொடர்ந்து நடந்து வருகிறது” எனத் தெரிவித்தார்.

எப்படி கிளினிக்கல் பரிசோதனை நடந்தது?

  • முதல் கட்டமாக கடந்த மாதம் 18-ம் தேதி ஆரோக்கியமான 18 தன்னார்வலர்களுக்குத் தடுப்பு மருந்து பரிசோதிக்கப்பட்டது.
  • 2-வது கட்டமாக கடந்த மாதம் 23-ம் தேதி 20 தன்னார்வலர்களுக்குப் பரிசோதிக்கப்பட்டது.
  • தன்னார்வலர்கள் அனைவரும் 18 வயது முதல் 65 வயதுடைய ஆண், பெண் இருபாலரும் இருந்தனர்.
  • தன்னார்வலர்கள் அனைவருக்கும் லையோபிலைஸுடு தடுப்பு மருந்து கொடுத்துப் பரிசோதிக்கப்பட்டது.
  • தடுப்பு மருந்தை உடலில் செலுத்தி, பரிசோதிக்கப்பட்டபின், தன்னார்வலர்களுக்கு காய்ச்சல், தலைவலி போன்றவை வந்தாலும், அந்தக் குறைபாடுகள் அடுத்த 24 மணிநேரத்தில் தீர்க்கப்பட்டன.
  • செச்னோவ் பல்கலைக்கழகத்தின் ஒற்றை அல்லது இரட்டை வார்டுகளில் தன்னார்வலர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
  • தடுப்பு மருந்து உடலில் செலுத்தப்பட்டபின் வேறு எந்தத் தொற்றுக்கும் ஆளாகாமல் இருக்கும் வகையில் தன்னார்வலர்கள் 28 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். டிஸ்சார்ஜ் செய்யப்பட்டபின் 6 மாதங்கள் கண்காணிக்கப்படுவார்கள்.
  • தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டபோது தன்னார்வலர்களுக்குப் போதுமான உளவியல் சிகிச்சையும் வழங்கப்பட்டது.
SCROLL FOR NEXT