உலகம்

ரத்தத்தில் இயல்புக்கும் மீறிய அளவில் சர்க்கரை உள்ள கோவிட்-19 நோயாளிகள் அதிகம் இறக்கின்றனர்: சீன மருத்துவ ஆய்வில் தகவல்

செய்திப்பிரிவு

கரோனா உற்பத்தியிடமான சீனாவின் வூஹானில் மேற்கொள்ளப்பட்ட புதிய மருத்துவ ஆய்வில் கரோனா நோயாளிகளுக்கு ரத்தத்தில் இயல்புக்கும் அதிகமாக சர்க்கரையின் அளவு இருந்தால் அதன் மூலம் அதிக மரணங்கள் நிகழ்கிறது மேலும் இதனால் சிக்கல்கள் பல உருவாகின்றன என்று தெரிய வந்துள்ளது.

வூஹான் அறிவியல் தொழில்நுட்பப் பல்கலைக்கழக யூனியன் மருத்துவமனை மற்றும் டோங்கி மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் யிங் ஜின் மற்றும் இவரது சகாக்கள் மேற்கொண்ட இந்த ஆய்வின் கண்டுப்பிடிப்புகள் ‘டயாபெடாலாஜியா’ என்ற இதழில் வெளிவந்துள்ளது.

இதற்கு முந்தைய ஆய்வுகளில் ‘ஹைபர்கிளைசீமியா’ என்ற ரத்தத்தில் அதிக சர்க்கரை எனும் நோய்கூறினால் நிமோனியா, ஸ்ட்ரோக், மாரடைப்பு, விபத்து மற்றும் அறுவை சிகிச்சை ஆகியவற்றில் அதிக மரணங்களை ஏற்படுத்துவது பற்றி விலாவாரியாக வெளியாகியுள்ளது.

ஆனால் கரோனா நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது சாப்பிடுவதற்கு முன்பு ரத்த குளூக்கோஸ் அளவு மற்றும் சர்க்கரை நோய் கணிக்கப்படாதவர்கள் ஆகியோருக்கு இடையிலான பாதிப்பு நிலவரங்கள் குறித்த கிளினிக்கல் விளைவுகள் சரியாக நிறுவப்படவில்லை.

இந்நிலையில் 2 மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் நோயாளிகள் அனுமதிக்கப்படும்போது உணவுக்கு முந்தைய ரத்த சர்க்கரை அளவு மற்றும் கரோனாவினால் 28 நாட்களில் மரணமடைந்த ஆனால் முன்னதாக கடும் நீரிழிவு நோய்க்காக கணிக்கப்படாதவர்களின் மாதிரிகளை ஆய்வுக்கு எடுத்து கொண்ட பின்னோக்கிய ஆய்வில் 65 வயதுக்கு மேற்பட்டோரின் மாதிரிகள் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதற்காக மரணமடைந்த 114 கரோனா நோயாளிகள் உட்பட 605 கரோனா நோயாளிகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர். இதில் 34% அதாவது 208 நோயாளிகளுக்கு முன்னமேயே ரத்த சர்க்கரை அளவு சோதிக்கப்படாத நிலையில் இவர்களின் ரத்தத்தில் அளவுக்கு அதிகமாக சர்க்கரை இருப்பது தெரியவந்தது. 29% நோயாளிகளுக்கு டைப் 2 வகை நீரிழிவு நோய் இருப்பது / இருந்தது தெரியவந்துள்ளது. மேலும் 17% நோயாளிகள் சர்க்கரை நோயின் ஆரம்ப அறிகுறிகளில் இருந்தனர்.

எனவே ரத்தத்தில் உயர்ந்த சர்க்கரை, இவர்கள் நீரிழிவு நோயாளிகளாக இருந்தாலும் சரி, அல்லது நோய்கணிக்கப்படாத ஆனால் ரத்தத்தில் அதிக சர்க்கரை இருப்பவர்களாக இருந்தாலும் சரி கரோனா நோய் ஏற்பட்டால் மரண விகிதம் அதிகமாக உள்ளது. மேலும் ரத்தத்தில் சர்க்கரை இருந்து கரோனாவினால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலையில் இன்சுலினையும் தடுத்து விடும் நிலை ஏற்பட்டு விடுகிறது.

ஹைபர்கிளைசீமியாவினால் ரத்தக்கட்டு, ரத்தக்குழாய் சுவர்கள் மோசமடைவது, நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பிலிருந்து மேலதிகமாக உருவாகும் சைட்டோகைன்களினால் ஏற்படும் அழற்சி நிலைகள் ஆகியவற்றினால் மரணங்கள் அதிகம் நிகழ்கிறது.

எனவே கரோனா நோயாளிகளுக்கு நீரிழிவு உள்ளதா, ரத்தத்தில் சர்க்கரை அளவு, சர்க்கரைக் கட்டுப்பாட்டு அளவுகோல்கள் ஆகியவை சோதிக்கப்படுவது அவசியம் என்று இந்த ஆய்வில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT