அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தின் பெடரல் நீதிபதி ஒருவர் கரோனா வைரஸ் பரவலை முன்னிட்டு உறவினர்கள் கோரிக்கையை ஏற்று மரண தண்டனையை இப்போதைக்கு நிறுத்தி வைத்துள்ளார்.
அதாவது அமெரிக்காவில் கொடூரக் கொலைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கபடும் போது குற்றவாளியினால் பாதிக்கப்பட்ட உறவினர்களுக்கு மட்டும் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதைப் பார்க்க சிறப்பு அனுமதி அளிக்கப்படும்.
டேனியல் லீ, இவர் 1999-ம் ஆண்டு தம்பதியினரையும் இவர்களது 8 வயது மகளையும் கொடூரமாகக் கொலை செய்ததற்காக மரண தண்டனை பெற்றார்.
வரும் திங்களன்று இவருக்கு ஊசி ஏற்றி மரண தண்டனை அளிக்கப்படுவதாக இருந்தது.
இந்நிலையில் கொலையாளி டேனியல் லீயினால் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள் சிலர் டேனியல் லீ சாவதைப் பார்க்கும் உரிமை எங்களுக்கு உள்ளது. நாவல் கரோனா வைரஸ் தொற்று பரவல் நிற்கும் வரை அவரது மரண தண்டனையை தள்ளி வைக்க வேண்டும். இப்போது கரோனா காலத்தில் எங்களால் மரண தண்டனை நிறைவேற்றத்தைப் பார்க்க முடியாது, எனவே ஒத்தி வைக்க வேண்டும் என்று கோர்ட்டில் மனு செய்திருந்தனர்.
இதனையடுத்து மாவட்ட தலைமை நீதிபதி ஜேன் மேக்னஸ் ஸ்டின்சன் மரண தண்டனை நிறைவேற்றத்தை ஒத்தி வைத்தார். 17 ஆண்டுகளில் இப்படி நடப்பது இதுவே முதல்முறை.
ஆனால் இவரது உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு அமெரிக்க நீதித்துறை நீதிபதி மேக்னஸிடம் முறையிட்டுள்ளது.