பாகிஸ்தானில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தானை பொறுத்தவரை பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணத்தில்தான் கரோனா பாதிப்பு அதிகமாக பரவி உள்ளது.
இந்த நிலையில் பஞ்சாப் மாகாணம் அரசு 7 நகரங்களில் ஸ்மாட் லாக்டவுனை வியாழக்கிழமை இரவு முதல் அறிவித்துள்ளது. 15 நாட்கள் இந்த ஸ்மார்ட் லாக்டவுனை அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து பஞ்சாப் மாகாணத்தின் சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், “ லாகூர், முல்தான், பைசலாபாத், குஜிரன்வாலா, குஜ்ராத், ராவல்பிண்டி, சியால்கோட் ஆகிய நகரங்களில் ஜூலை 24 ஆம் தேதிவரை ஊரடங்கு விதிக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் இதுவரை 13 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் ஜூன் மாதத்தில் கரோனா பரவல் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் நாட்டின் பொருளாதாரத்தைச் சுட்டிக் காட்டி ஊரடங்கை அமல்படுத்தாமல் இருந்தார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்.
இந்த நிலையில் கடும் விமர்சனங்கள் எழுந்ததால், கரோனா தொற்று அதிகமாக உள்ள மாகாணங்களில் ஸ்மார்ட் லாக்டவுனை பாகிஸ்தான் அரசு அறிமுகப்படுத்தியது. அதன்படி, வணிக நிறுவனங்கள் வாரத்திற்கு 5 நாட்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மருந்துக் கடைகளுக்கு எந்தக் கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை.
கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள், உணவு விடுதிகள் ஆகியவற்றைத் திறக்க அனுமதி அளிக்கவில்லை. அதேபோல் மதக் கூட்டங்களுக்கும் அனுமதி அளிக்கவில்லை
பாகிஸ்தானைப் பொறுத்தவரை ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில்தான் கரோனா வைரஸ் உச்சத்தை அடையும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.